Saturday, October 10, 2009

ஜேகே

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும்போது, சுஜாதாவின் படைப்புகளிலிருந்து நான் ரசித்ததை இதில் குறிப்பிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். காரணம்,அவர் படைப்புகளையும்,அவற்றில் ரசித்ததையும் குறிப்பிட ஆரம்பித்தால் இந்த வலைப்பதிவு சுஜாதாவுக்காகவே தாரை வார்க்கப்பட்ட ஒரு வலைப்பதிவு என்று ஆகி இருக்கும்.

இப்பொழுது இங்கு பதிவது,சுஜாதாவை என்னுடன் சேர்ந்து வியக்கும் நண்பர்கள் சாட்டில் இல்லாததாலும்,இன்று அலுவலகம் விடுமுறை என்ற காரணத்தாலும்.

இன்று இன்னொரு முறை ஜேகே படித்தேன்.இக்கதை வெளியான ஆண்டு 1971 இறுதியில்.இவற்றில் பல வரிகள் ரசிக்க வைத்தன.ஆச்சர்யம் கொள்ள வைத்தன என்பதே சரி.அவற்றில் சில வரிகள் கீழே:

1. நண்பர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் ஜேகே பைலட்,ஸ்டண்ட் நடிகன்,காதலன்,அடிபட்டவன்,அடிப்பவன்,எல்லாவற்றையும் ஒருமுறை பதம் பார்த்தவன்(நீங்கள் நினைப்பது உட்பட).

2.1,500 அடியில் பறந்து சிவப்பு முண்டாசுடன் அடையாளத்துக்கு நிற்கும் விவசாயிகளை நோக்கி,
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம் என்று இயங்கி,50 அடியில் பறந்து,
மருந்தைச்சிதற அடித்துவிட்டு,மறுபடி ஏறி,மறுபடி இறங்கி நூறு அடி தள்ளி,
மறுபடி போன வரியை சேர்த்துக்கொள்ளவும்.
(இக்கதையின் நாயகன் ஜேகே வயல்களுக்குப்பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தின் பைலட்).


3.மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் கதைகளில் விதி சிரிக்குமே;அதுபோல, அப்போது என் அறையில் அலமாரி ஓரத்தில் ஹேர் ஆயில் பாட்டில் அருகில் விதி சின்னதாக உட்கார்ந்திருந்தால் சிரித்திருக்கும்.

4.ஆம்லெட் வந்தது.....ஸாஸைச்சேர்த்துக்கொண்டு ஸ்லைஸைக் கடித்துக்கொண்டு முள்குத்தி அதை விழுங்கினேன்.நல்ல பசி! இல்லாவிட்டால் இந்த மாதிரி ஆம்லெட்டைச் சாப்பிடுகிற ஜாதி இல்லை நான்.....

5.அவன் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் கதாநாயகி ‘சேகர்’ என்று ஓடி வருவதைப்போல் என் விமானத்தை நோக்கி ஓடி வந்தான்.

6.”நான் என் லாயரை கலந்து கொள்ளாமல் ஒரு வார்த்தை பேச மாட்டேன்” என்றேன், எட்டு வார்த்தைகளில்.

7. கான்ஸ்டபிள் விஷமமாக,கிருஷ்ண பரமாத்மா போல சிரித்தார்.

Monday, October 5, 2009

சிகரங்களில் உறைகிறது காலம்

சமீபத்தில் வாசித்த கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்” கவிதைத்தொகுப்பில் எனக்குப்பிடித்த கவிதை:

மேசையின் விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப்போல் உள்ளது
நம்பிக்கை

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக்காத்திருக்கிறது
திரவம்

எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே காலியாய் இருப்பதில்லை மேசை.