Wednesday, November 11, 2009

லா.ச.ரா

லா.ச.ராமாமிர்தத்தின் Introspective Writing எல்லாரும் அறிந்ததே.
”கணுக்கள்” என்று ஒரு சிறுகதை.அதில், நாசூக்காகப்பேசிப் பேசிக்காரியத்தைச் சாதிக்கிற ஒரு பெண்ணின் பாத்திரம் வரும்.அவளது அந்த சுபாவத்தைச் சித்தரிக்க,அவர் எழுதிய உவமை “மாம்பூவைக் காம்பாய்ந்தாற் போல்”. இந்த உவமையின் பிண்ணனி சுவாரசியமானது.பெண்ணின் பாத்திரத்தை சித்தரிக்க சரியான உவமை கிடைக்காததால் கணுக்கள் கதையை லா.ச.ராவால் முடிக்க இயலவில்லை.ஒருநாள்,இதை யோசித்துக்கொண்டு தூங்கி விட்டாராம்.கனவில், ஒரு வெறும் சுவர்,அதில் ஒரு கரிக்கட்டி தானே “மாம்பூவைக்காம்பாய்ந்தாற்போல்” என்று எழுதியதாம்.இதுவே சரியான உவமை என்று எண்ணி அப்படியே கணுக்கள் கதையில் எழுதி கதையை முடித்தாராம்(மாம்பூ ரொம்ப நளினமானது, அதன் காம்பாய்வது ரொம்ப கடினம்).சரியான உவமை கிடைக்காததால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு கணுக்கள் கதையை முடிக்காமல் வைத்திருந்தார் என்று படித்த ஞாபகம்.

சொற்சிக்கனம் படைப்பின் வீரியத்தை அதிகப்படுத்தும் என்பதில் அபார நம்பிக்கைகொண்டவர்.இவரது படைப்புகளில் இது நிதர்சனம்.

சொற்பிரயோகத்தைப்பற்றி அவரின் விளக்கம் ”சொல்லோடு என் உறவு” கட்டுரையிலிருந்து:

"குந்துமணிகள் பூமியில் பொடிக்கற்களுடன் சேர்ந்து இறைந்து கிடக்கின்றன.ஒரு பக்கம் சிவப்பு,ஒரு பக்கம் கறுப்பு,இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும்,பிள்ளையார் பார்வையில் என்ன உயிர்! என்ன உக்கிரம்! சிவந்த விளிம்பில் கறுவிழியாக குந்துமணி மாறி விடுகிறது.என்ன தத்ரூபம்!அப்போது தோன்றுகிறது.அந்தக்குந்துமணி இல்லாமல் பிள்ளையார் இல்லை.ஆனால்,பிள்ளையாரில்லாவிடில் குந்துமணிக்குப் பலனும் இல்லை,பயனும் இல்லை.பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவு இதுபோல்தான் என்று சொல்லலாம்.ஆகவே, சொற்கள் வெறும் உமியாகிவிடுவதோ,கத்தியை இட்ட உறையாக மாறுவதோ,சொற்களைப்ப்ரயோகம் செய்வதைப்பொறுத்தது”.