Wednesday, November 11, 2009

லா.ச.ரா

லா.ச.ராமாமிர்தத்தின் Introspective Writing எல்லாரும் அறிந்ததே.
”கணுக்கள்” என்று ஒரு சிறுகதை.அதில், நாசூக்காகப்பேசிப் பேசிக்காரியத்தைச் சாதிக்கிற ஒரு பெண்ணின் பாத்திரம் வரும்.அவளது அந்த சுபாவத்தைச் சித்தரிக்க,அவர் எழுதிய உவமை “மாம்பூவைக் காம்பாய்ந்தாற் போல்”. இந்த உவமையின் பிண்ணனி சுவாரசியமானது.பெண்ணின் பாத்திரத்தை சித்தரிக்க சரியான உவமை கிடைக்காததால் கணுக்கள் கதையை லா.ச.ராவால் முடிக்க இயலவில்லை.ஒருநாள்,இதை யோசித்துக்கொண்டு தூங்கி விட்டாராம்.கனவில், ஒரு வெறும் சுவர்,அதில் ஒரு கரிக்கட்டி தானே “மாம்பூவைக்காம்பாய்ந்தாற்போல்” என்று எழுதியதாம்.இதுவே சரியான உவமை என்று எண்ணி அப்படியே கணுக்கள் கதையில் எழுதி கதையை முடித்தாராம்(மாம்பூ ரொம்ப நளினமானது, அதன் காம்பாய்வது ரொம்ப கடினம்).சரியான உவமை கிடைக்காததால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு கணுக்கள் கதையை முடிக்காமல் வைத்திருந்தார் என்று படித்த ஞாபகம்.

சொற்சிக்கனம் படைப்பின் வீரியத்தை அதிகப்படுத்தும் என்பதில் அபார நம்பிக்கைகொண்டவர்.இவரது படைப்புகளில் இது நிதர்சனம்.

சொற்பிரயோகத்தைப்பற்றி அவரின் விளக்கம் ”சொல்லோடு என் உறவு” கட்டுரையிலிருந்து:

"குந்துமணிகள் பூமியில் பொடிக்கற்களுடன் சேர்ந்து இறைந்து கிடக்கின்றன.ஒரு பக்கம் சிவப்பு,ஒரு பக்கம் கறுப்பு,இரண்டையெடுத்து மண் பிள்ளையார் விழிகளில் பதித்ததும்,பிள்ளையார் பார்வையில் என்ன உயிர்! என்ன உக்கிரம்! சிவந்த விளிம்பில் கறுவிழியாக குந்துமணி மாறி விடுகிறது.என்ன தத்ரூபம்!அப்போது தோன்றுகிறது.அந்தக்குந்துமணி இல்லாமல் பிள்ளையார் இல்லை.ஆனால்,பிள்ளையாரில்லாவிடில் குந்துமணிக்குப் பலனும் இல்லை,பயனும் இல்லை.பொருளுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவு இதுபோல்தான் என்று சொல்லலாம்.ஆகவே, சொற்கள் வெறும் உமியாகிவிடுவதோ,கத்தியை இட்ட உறையாக மாறுவதோ,சொற்களைப்ப்ரயோகம் செய்வதைப்பொறுத்தது”.

Saturday, October 10, 2009

ஜேகே

நான் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும்போது, சுஜாதாவின் படைப்புகளிலிருந்து நான் ரசித்ததை இதில் குறிப்பிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். காரணம்,அவர் படைப்புகளையும்,அவற்றில் ரசித்ததையும் குறிப்பிட ஆரம்பித்தால் இந்த வலைப்பதிவு சுஜாதாவுக்காகவே தாரை வார்க்கப்பட்ட ஒரு வலைப்பதிவு என்று ஆகி இருக்கும்.

இப்பொழுது இங்கு பதிவது,சுஜாதாவை என்னுடன் சேர்ந்து வியக்கும் நண்பர்கள் சாட்டில் இல்லாததாலும்,இன்று அலுவலகம் விடுமுறை என்ற காரணத்தாலும்.

இன்று இன்னொரு முறை ஜேகே படித்தேன்.இக்கதை வெளியான ஆண்டு 1971 இறுதியில்.இவற்றில் பல வரிகள் ரசிக்க வைத்தன.ஆச்சர்யம் கொள்ள வைத்தன என்பதே சரி.அவற்றில் சில வரிகள் கீழே:

1. நண்பர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் ஜேகே பைலட்,ஸ்டண்ட் நடிகன்,காதலன்,அடிபட்டவன்,அடிப்பவன்,எல்லாவற்றையும் ஒருமுறை பதம் பார்த்தவன்(நீங்கள் நினைப்பது உட்பட).

2.1,500 அடியில் பறந்து சிவப்பு முண்டாசுடன் அடையாளத்துக்கு நிற்கும் விவசாயிகளை நோக்கி,
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம் என்று இயங்கி,50 அடியில் பறந்து,
மருந்தைச்சிதற அடித்துவிட்டு,மறுபடி ஏறி,மறுபடி இறங்கி நூறு அடி தள்ளி,
மறுபடி போன வரியை சேர்த்துக்கொள்ளவும்.
(இக்கதையின் நாயகன் ஜேகே வயல்களுக்குப்பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தின் பைலட்).


3.மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் கதைகளில் விதி சிரிக்குமே;அதுபோல, அப்போது என் அறையில் அலமாரி ஓரத்தில் ஹேர் ஆயில் பாட்டில் அருகில் விதி சின்னதாக உட்கார்ந்திருந்தால் சிரித்திருக்கும்.

4.ஆம்லெட் வந்தது.....ஸாஸைச்சேர்த்துக்கொண்டு ஸ்லைஸைக் கடித்துக்கொண்டு முள்குத்தி அதை விழுங்கினேன்.நல்ல பசி! இல்லாவிட்டால் இந்த மாதிரி ஆம்லெட்டைச் சாப்பிடுகிற ஜாதி இல்லை நான்.....

5.அவன் தமிழ் சினிமாவில் கடைசி சீனில் கதாநாயகி ‘சேகர்’ என்று ஓடி வருவதைப்போல் என் விமானத்தை நோக்கி ஓடி வந்தான்.

6.”நான் என் லாயரை கலந்து கொள்ளாமல் ஒரு வார்த்தை பேச மாட்டேன்” என்றேன், எட்டு வார்த்தைகளில்.

7. கான்ஸ்டபிள் விஷமமாக,கிருஷ்ண பரமாத்மா போல சிரித்தார்.

Monday, October 5, 2009

சிகரங்களில் உறைகிறது காலம்

சமீபத்தில் வாசித்த கனிமொழியின் “சிகரங்களில் உறைகிறது காலம்” கவிதைத்தொகுப்பில் எனக்குப்பிடித்த கவிதை:

மேசையின் விளிம்பில்
வைக்கப்பட்டிருக்கும்
மெல்லிய கண்ணாடிக்
குவளையைப்போல் உள்ளது
நம்பிக்கை

விபரீதமான ஒரு தருணத்தை
எதிர்நோக்கிக்காத்திருக்கிறது
திரவம்

எங்கு வைத்தாலும் நகர்ந்து
விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது
குவளை
அவசரத்தில் எறியப்படும்
வார்த்தைகளையும்
நழுவி விழும் உண்மைகளையும்
அறியப்படாதுபோகும் ஸ்பரிசங்களையும்
எதிர்நோக்கி
சிதறிப்போதலை வேண்டியபடி
ஆனால்
என்றுமே காலியாய் இருப்பதில்லை மேசை.

Wednesday, September 30, 2009

இராமாயணம்

இராமாயணம் முழுவதும் எண்ணிலடங்காத உவமைகள்.அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு உவமை கீழே:

கைகேயி இராமர் பதினான்கு வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்,பரதன் முடிசூட வேண்டும் ஆகிய இரண்டு வரங்களைப்பெறுகிறாள்.இராமர் கோசலையை விட்டுச் செல்லும்போது, தசரதனின் முக்கிய மந்திரியாகிய சுமந்திரர் இராமருக்கு இரதம் ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் செல்கிறார்.ச்ருங்கவேர்புரம்(குகனுடைய நாடு) என்ற இடத்தில் இராமர்,சீதை,இலக்குவன்,சுமந்திரர் ஆகியோர் அங்கு சில நாட்கள் குகனுடன் தங்கிவிட்டு சுமந்திரர் இராமரிடத்தில் விடைபெற்று கோசலைக்கு திரும்பிச் செல்கிறார்.

கோசலை சென்றவுடன் மன்னர் தசரதரிடம் “.இராமரின் பிரிவினால் கோசல நாட்டில் அசையும் அசையாததுமான ஜீவன்களெல்லாம் துயரம் நிறைந்த நிலையில் இருப்பதை வழிநெடுகக் காணநேர்ந்தது” என்றார்.

இதைக்கேட்ட தசரதன் இவ்வாறு அறிவித்தான் “நான் துயரக்கடலில் மூழ்கிவிட்டேன்.இதனின்று வெளி வருவது கடினம்.இந்தத்துயரக்கடலின் கரைகள் கைகேயியின் இரு வரங்கள்,இராமருடைய வனவாசம் இக்கடலின் விஸ்தாரம்.நான் உள்ளும் புறமும் விடுகின்ற சுவாசமானது கடலின் அலைகள்,துயரத்தால் இருகைகளையும் தூக்கி வீசுகின்றேனே அது அக்கடலில் துள்ளும் மீன்கள்.என் விரிந்த தலை கேசங்கள் கடலின் காளான்கள்.நான் கதறும் கதறல் துயரக்கடலின் கடலோசை,கைகேயி ஆனவள் துயரக்கடலின் அடியில் தோன்றும் தீயானவள்.அந்தத்தீயானது என்னுடைய கொதிக்கும் கண்ணீரின் காரணமாகும்.மந்தரையின் வார்த்தைகள் கடலுக்குத்தொல்லை அளிக்கும் முதலைகளாகும்.

Thursday, July 2, 2009

உதயண குமார காவியம்

உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் உஞ்சைக்காண்டத்தில் 3வது பாடல்:

மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.

இப்பாடலின் பொருள்:
மாணிக்கம் முதலிய மணிகளை இட்டுப் பொதிந்துள்ள துணியை,அந்த மணிகளைத் தன்னுள் கொண்டிருந்த காரணத்தினாலே, அத் துணியை இகழாமல் அந்த மணிகளோடே சேர்ந்து நன்கு மதித்து வைப்பார் உலகத்தினர். அது போலவே, அறிஞர்கள் பிறருடைய சொற்கள் குற்றமுடைய சொற்களாக இருந்தாலும்,அச்சொற்கள் தூய்மையுடைய நல்ல உறுதிப்பொருளைத் கொள்ளுமிடத்து, அணிகலண்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்வர்.

Saturday, June 20, 2009

கனிமொழி

அகத்திணை,கருவறை வாசனை போன்ற கனிமொழியின் கவிதைத்தொகுப்புகளில் எனக்குப்பிடித்தது அகத்திணை. நெடிய தமிழ் மரபின் தொடர்ச்சியாக கனிமொழியின் கவிதைகளைக் காணலாம் என்ற நஞ்சுண்டனின் வாக்கியத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அற்புதமான கவிதைத் தொகுப்பு.இத்தொகுப்பில், கனிமொழியின் பெரும்பான்மையான கவிதைகள் என்னைக்கவர்ந்தன.அவற்றில் ஒன்று,

எத்தனைமுறை விலக்கினாலும்
திரும்பத் திரும்பப் புரண்டு
மேலே கால் தூக்கிப்போடும்
குழந்தையாய் நினைவுகள்.

இந்தக்கவிதைப்பொருளின் உவமையை விளக்கும் அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

Tuesday, June 16, 2009

நகுலன்

நகுலனின் ”யாத்திரை” குறுநாவலிலிருந்து ஒரு உவமை.

நகுலன் வழக்கமாக தனது படைப்புகளில் உலவவிடும் நவீனனின் எழுத்துப் பிரேமையையும்,எழுத்துப் பற்றிய நவீனனின் எண்ணங்களையும் விவரிப்பதாக அமைந்துள்ளது இந்த உவமையின் சூழல்.

“இந்த எழுதும் விஷயம் நவீனனுக்கு எப்பொழுதுமே ஒரு சுவாரஸ்யமான காரியமாகப்பட்டது.அவனுக்கு ஆங்கிலக்கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் எழுதுவதைப் பற்றிக் கூறியது ஞாபகம்.

அதில் அவன் வற்புறுத்தியதெல்லாம் அனுபவத்திற்கும் எழுத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதுதான் என அவனுக்குத்தோன்றியது.ஏனெனில்,அப்பொழுதுதான் அனுபவத்தைச் சாட்சி பூதமாக நம்மால் பார்க்க முடிகிறது.ஒரு கலைஞன் தன்னை அறியாமலே தன்னைத் தயாரித்துக்கொள்கிறான்.தன்னை வளர்க்கும் உலகில் தானும் ஒன்றாக அமிழ்ந்த பால் உணர்ச்சி விழித்தெழுவது போல குறிப்பிட்ட சமயம் வரும்போது எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறான் என்று அவனுக்குத் தோன்றியது”.