Thursday, June 11, 2009

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்

ॐ त्रयम्बकं यजामहे सुगंधिम पुष्टिवर्धनम
उर्वा-रुकमिव भंधानात मृत्योर-मुक्षीय माँ अम्रितात

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வா ருகமிவ பந்தாநாத் ம்ருத்யோர்முக்‌ஷீய மாஅம்ரிதாத்

முக்கண்ணனை, நாற்றத்தின் நேரியனை, செல்வம் உயர்த்துவோனான உன்னை நான் வணங்குகிறேன் - ஐயா, எவ்வாறு பழுத்த வெள்ளரி, கொடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறதோ, அதே போன்று,எங்களையும்,ஜனனம்,மரணம்,மறுபிறப்பு போன்ற சுழற்சியிலிருந்து விடுவித்து,மோக்ஷத்தை தரும் அமிர்தம் அருள்வாய்.

கனியாகி விழும்போது கனிதான் கழன்று விழும், ஆனால் வெள்ளரி மட்டும் பழுக்குங்கால் பழம் அங்ஙனமே இருக்கும், கொடி நகர்ந்து / பிரிந்து / விட்டு விலகி செல்லும்.

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் - சில குறிப்புகள்

ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ரிக் வேதத்தில் உள்ளது(மண்டலம் 7-அத்தியாயம் 59).இம்மந்திரம்,ருத்ர மந்திரம் என்றும்,த்ரயம்பக மந்திரம் என்றும்,ம்ரிதசஞ்சீவனி மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சுக்கிரன், இந்திரனுடன் மேற்கொண்ட சவாலில் வெற்றிபெற,அக்னியின் புகை உடலில் ஏற, மரத்தில் தலைகீழாக தொங்கி இருபது வருடம் தவம் செய்தான்.இந்திரன் தனது தோல்வியை சுக்கிரனிடம் ஒப்புக்கொண்டவுடன்,சிவ பெருமான் சுக்கிரனின் உடல் பழைய நிலையை அடைய இந்த மந்திரத்தை போதித்தார்.இந்த மந்திரத்தை பின்நாளில்,சுக்கிரன் பிரஹஸ்பதிக்கு போதித்து,ப்ரஹஸ்பதி மூலம் தேவர்களுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதே மந்திரம் வசிஷ்டரிடம் லோகக்ஷேமத்துக்காக அளிக்கப்பட்டது.

நான்கு பாதங்களும்,ஒவ்வொரு பாதத்திலும் எட்டு அசைகளையும்(அனுஷ்டுப் சந்தம்) கொண்ட இந்த மந்திரோபதேசத்தை, சுக்கிரன்,ததீசன் என்ற முனிவருக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

சுக்கிரன் ததீசனிடம் வழங்கிய இம்மந்திரத்தின் பொருள் கீழே:

முதல் பாதம் - த்ரயம்பகம் யஜாமஹே..அதாவது,த்ரயம்பகனை வணங்குகிறோம்.த்ரயம்பகன் என்பது சிவபெருமானைக்குறிக்கும்(த்ரய என்றால் மூன்று,அம்பகம் என்றால் கண்கள்). மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்குகிறோம்.இதுவே முதல் பாதத்தின் பொருள். மேலும்,சிவபெருமான் பூ,புவ,ஸ்வர்க்க ஆகிய மூன்று லோகங்களுக்கும், சூர்ய,சோம,அக்னி போன்ற மூன்று மண்டலங்களுக்கும் தந்தை.சாத்வ,ரஜோ,தமோ ஆகிய மூன்று குணங்களை உள்ளடக்கிய மகேஸ்வரன்.ஆத்ம தத்வம்,வித்யா தத்வம்,சிவ தத்துவம் போன்ற மூன்று தத்துவங்களைக் கொண்ட சதாசிவன்.அவனே ஆவாஹனீயம்,க்ரஹபத்யம்,தக்‌ஷிணாக்னி போன்ற மூன்று சக்திகளின் பிறப்பிடம்.

இரண்டாம் பாதம் - சுகந்திம் புஷ்டிவர்த்தனம்.அதாவது,எவ்வாறு மலரின் சுகந்தம் எல்லா திசைகளிலும் பரவி இருக்கிறதோ,அதேபோல், சிவனும் பஞ்சபூதங்களிலும்,பத்து இந்திரியங்களிலும்,மூன்று குணங்களிலும்,எல்லா கணங்களிலும் பரமாத்மாவாக பரவி இருக்கிறான்.ப்ரக்ருதியின் நிலைத்த தன்மையை அளிக்கும் அம்சம் சிவபெருமானிடம் இருக்கிற காரணத்தால் புஷ்டிவர்த்தனன் எனவும் அழைக்கப்படுகிறான்.

மூன்று மற்றும் நான்காம் பாதம் - உர்மருகமிவ பந்தாநாத் ம்ருத்யோர் முக்க்ஷீ‌ய மாஅம்ரிதாத்
அதாவது,எவ்வாறு பழுத்த வெள்ளரி, கொடியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறதோ, அதே போன்று,எங்களையும்,ஜனனம்,மரணம்,மறுபிறப்பு போன்ற பிறவியின் சுழற்சியிலிருந்து விடுவித்து,மோக்ஷத்தை தரும் அமிர்தத்தை அருள்வாய்.

மேற்சொன்ன பாதங்களுக்கு கீழ்க்கண்டவாறும் அர்த்தம் கொள்ளலாம்.
உர்வம் என்றால் சக்தி வாய்ந்த,ரோகம் என்றால் வியாதி.பந்தாநாத் என்றால் பிணைப்பு.ம்ருத்யோர்முஷீ‌ய என்றால் மரணத்திலிருந்து விடுவிப்பது.மாஅம்ரிதாத் என்றால் அமுதம் வேண்டுவது.அதாவது, நாங்கள் சக்தி வாய்ந்த,மரணத்தை வரவழைக்கும் வியாதிகளால் பீடிக்கப்பட்டுள்ளோம்(இப்பெருவியாதிகளுக்கும் மூன்று குணங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.அவித்யை-அறியாமை,அசத்-தவறான உணர்வுகளைப் பின்பற்றுதல் ,ஷத்ரிபு - பலவீனம்).இந்த மரணத்திலிருந்து விடுவித்தும்,ஜனனம் மற்றும் மரணம் போன்ற பிறவிச்சுழற்சியில் ஈடுபடுத்தாமல் மோக்‌ஷத்தை அடையும் அமிர்தத்தை அளிப்பாயாக என்றும் பொருள் கொள்ளலாம்.

1 comment:

  1. Dear Friends,
    we should recomend for a good amount of stipned for the research work being done by karthik to continue the good work in the days to come ,even very few reputed writers today does this work.

    Dear Karthik,
    Hats off to your involvement !!!!!!!!

    ReplyDelete